பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழா; சம்ஸ்கிருதத்தில் நடத்த அறநிலையத்துறை திட்டம்: சீமான் பகீர் குற்றச்சாட்டு

சீமான்
சீமான்

தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது பழநி கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக சீமான் அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில்," இறையோன் பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழிலேயே நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. முப்பாட்டன் முருகனுக்கு தமிழ் முன்னோர் கட்டிய கோயிலில் தாய்த்தமிழில் குடமுழுக்கு நடத்தக்கூட திமுக அரசு அனுமதி மறுப்பது வெட்கக்கேடாகும்.

நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் கடந்த 2020 பிப். 5-ம் தேதி தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா தமிழ் மொழியில் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து சட்டப் போராட்டம் நடத்தி வெற்றிப் பெற்றது.

நீதிமன்ற ஆணையை அரசு ஏற்ற, அன்றைய அதிமுக அரசு தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ் வழியில் நடத்த ஆவனச் செய்தது. இதை தொடர்ந்து, 2020 டிச.4-ம் தேதி, கரூர் பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு குறித்து முன்கூட்டியே வீரத்தமிழர் முன்னணி சார்பில், தமிழ் வழியில் குடமுழுக்கு கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முறையிட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் குடமுழுக்கு நடக்கும்போது உறுதியாக தமிழில் நடத்தப்பட வேண்டும் எனவும், இதை நிறைவேற்றத் தவறும் கோயில் நிர்வாகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தீர்ப்பு வழங்கினர்.

ஆனால், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழா ஜன.27-ம் தேதியன்று நடைபெறு உள்ளது. இந்நிலையில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்துவதற்கான எவ்வித அறிவிப்பும் இதுவரை கோயில் நிர்வாகம் வெளியிடாதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குடமுழுக்கை சம்ஸ்கிருதத்தில் மட்டுமே நடத்த கோயில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தமிழ்நாட்டில், தமிழர் கட்டிய கோயிலில், தமிழ் இறையோன் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்தவேண்டி, வீதியில் இறங்கி தமிழர்கள் போராட வேண்டிய நிலையிருப்பது தமிழ் பேரினத்திற்கே ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அவமானமாகும்.

மொழி சிதைந்தால் இனம் சிதையும், இனம் சிதைந்தால் பண்பாடு அழிந்துவிடும் என்றெல்லாம் மேடையில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பழநி முருகன் கோயிலின் குடமுழுக்கை தமிழில் நடத்த அனுமதி மறுப்பது ஏன்? தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு என்பதெல்லாம் வெறும் மேடைப் பேச்சிற்கு மட்டும்தானா? இதற்கு பெயர் தான் திராவிட மாடலா? என்ற கேள்வியும் எழுகிறது. ஆகவே, தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது பழநி கோயில் குடமுழுக்கு விழாவின் அனைத்து நிகழ்வுகளும் அன்னைத் தமிழிலேயே நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். இது குறித்த அறிவிப்பாணையை முன்கூட்டியே வெளியிட தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in