கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகானை பல்கலைக் கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரத்யேகச் சட்டம் இயற்றப்படும் என கேரள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து தெரிவித்துள்ளார்.
கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறுகையில், “கேரளப் பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் அதிகாரக் குறைப்பு மசோதாவில் ஆளுநர் ஆரிப் முகமதுகான் கையெழுத்திடாமல் உள்ளார். இதேநிலை நீடித்தால் அடுத்த மாதம் சிறப்பு சட்டசபையைக் கூட்டி, ஆளுநரின் அதிகாரம் பறிக்கப்படும். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முந்தைய அரசாணைகள் பலவும் கவர்னரால் கிடப்பில் கிடக்கின்றன ”என்றார்.
வேந்தர் பதவிக்கு ஆளுநரை நீக்கிவிட்டு கல்வியாளர்களை நியமிக்கும் மசோதாவையும் கேரள இடதுசாரி அரசு கொண்டுவர முடிவு செய்துள்ளது. ஆனால், இதன்வழியே கம்யூனிஸ்ட் கட்சியினரையே பொறுப்பிற்குக் கொண்டுவரும் வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ், பாஜக கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டால் கேரளத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களையும் திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகமான ‘ஏ.கே.ஜி சென்டரே’ தீர்மானிக்கும் என காங்கிரஸ், பாஜக கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனாலும், இந்த மசோதாவைக் கொண்டுவருவதில் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.