தமிழக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். அவர் பூரண குணடைந்த நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தமிழக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சில தினங்களுக்கு முன்பு சளி, லேசான இருமல் என கரோனா அறிகுறிகள் இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார்.
சிகிச்சையில் இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவர் செய்துவரும் முக்கிய நகர்வுகளை மருத்துவமனையில் இருந்தே செய்துவந்தார். அதிமுகவில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டவர்கள் முன்பு இருந்த பதவியிலேயே தொடர்வார்கள் என்பது முதல், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை நீக்குவதாக அறிவிப்பதுவரை அவர் இயங்கியே வந்தார். இந்நிலையில் கரோனா தொற்று குணமடைந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருந்தும் அடுத்த மூன்று நாள்கள் நன்கு ஓய்வெடுக்கவும் அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.