பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்த பிறகு இன்று தனது சொந்த மாவட்டமான தேனிக்கு வருகை புரிந்த ஓ. பன்னீர்செல்வத்திற்கு அவரது ஆதரவாளர்கள் தடபுடலான வரவேற்பை அளித்தனர்.
கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஓபிஎஸ்சுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது.
இதனையடுத்து, அவரது ஆதரவாளர்கள் அதிகம் இருக்கக்கூடிய தென் மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி தீர்ப்பை வரவேற்று மகிழ்ந்தனர்.
இந்நிலையில், ஓபிஎஸ், சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு இன்று வந்தார். முன்னதாக விமான மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய ஓபிஎஸ்சுக்கு மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் பிரம்மாண்டமான வரவேற்பை அளித்தனர்.
தொடர்ந்து, மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக காரில் தேனிக்கு மாலை 3 மணி அளவில் சென்ற ஓபிஎஸ்சுக்கு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அவரது ஆதரவாளர்கள் ரோஜா பூ மற்றும் இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து தடபுடலான வரவேற்பினை அளித்தனர்.