நேற்று வரை ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் இன்று ஈபிஎஸ்சை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். அதிமுகவில் திடீரென நடக்கும் மர்மமான காரியங்களால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் மோதல் உச்ச கட்டத்தை எட்டியது. ஓபிஎஸ்க்கு எதிராக தண்ணீர் பாட்டில்களை வீசியதை கண்டுகொள்ளாமல் இருந்தார் ஈபிஎஸ். இவரது இந்த செயல் தொண்டர்கள் மட்டுமின்றி அரசியல் விமர்சகர்களையும் வேதனையடைய வைத்தது. பணம் கொடுத்து கூட்டம் கூட்டப்பட்டதாக ஈபிஎஸ்க்கு எதிராக குற்றச்சாட்டுகள் ஒரு புறம் இருக்கும் நிலையில், மறுபுறம் ஓபிஎஸ் ஆதரவாளர்களை இழுக்கும் படலத்தை வேலுமணி, தங்கமணி செய்து வருவதாக கூறப்படுகிறது.
பொதுக்குழுவில் தனக்கு ஆதரவாக செயல்பட 5 ஆயிரம் கோடிக்கு மேல் ஈபிஎஸ் தரப்பு செலவழித்ததாகவும், விலை போனவர்கள்தான் ஓபிஎஸ்-க்கு எதிராக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனை ஆமோதிக்கும் வகையில் நேற்று வரை ஓபிஎஸ் ஆதரவாளவர்களாக இருந்தவர்கள் இன்று ஈபிஎஸ் பக்கம் சாய்ந்துள்ளனர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்று கூறப்பட்ட பெரம்பலூர் மாவட்ட ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எதிர்கட்சி தலைவர் ஈபிஎஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஈபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2,440 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திடீர் திடீரென ஈபிஎஸ் பக்கம் தாவி வருவது மர்மமாகவே இருந்து வருகிறது. அதிமுகவில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் விழிபிதுங்கி இருக்கிறார்கள் அப்பாவி தொண்டர்கள்.