‘அதிமுக அலுவலகத்தை சூறையாடியது ஓபிஎஸ் அல்ல; திமுகவும், காவல்துறையும்தான்’ - சி.வி.சண்முகம் பகீர் குற்றச்சாட்டு

‘அதிமுக அலுவலகத்தை சூறையாடியது ஓபிஎஸ் அல்ல; திமுகவும், காவல்துறையும்தான்’ - சி.வி.சண்முகம் பகீர் குற்றச்சாட்டு

அதிமுக அலுவலகத்தை சூறையாடியது ஓ.பன்னீர் செல்வம் அல்ல, திமுகவும், காவல்துறையும்தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் மின் கட்டணம், குடிநீர் வரி, வீட்டு வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு எம்.எல்.ஏ சக்கரபாணி தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எம்பியுமான சிவி சண்முகம், “ ஓராண்டாக ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலும் பரவாயில்லை. ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம், மகளிர்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் போன்றவைகளை தொடர்ந்து செயல்படுத்தாமல் முடக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பெட்ரோல்,டீசல் விலையைக் குறைத்தது. அருகில் உள்ள புதுச்சேரி அரசும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது. ஆனால் தமிழக அரசு இன்னமும் குறைக்கவில்லை.

இந்த ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. கட்டுமானபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் பாலம் கட்ட தொடங்கிவிடுவார்கள். ஏனெனில் இங்குள்ள் சிமெண்ட் ஆலைகள் எல்லாம் திமுகவினரின் பினாமியுடைடையது. அதிமுக ஆட்சியில் ஒரு டன் கம்பி 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. தற்போது 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறது. சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு ரூ 225க்கு விற்றது. இன்று ரூ.525 விற்கிறது. கட்டுமானபொருட்களின் விலை உயர்வால் தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கள்ளகுறிச்சி கலவரத்திற்கு முக்கிய காரணம் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தான். உளவுத்துறையின் அறிக்கையில் இக்கலவரத்திற்கு காரணமாக சாதிகள் என சில சாதிகளை குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கை செய்தியாக வெளியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் சாதிக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது.

திமுகவின் ஆட்சியில் பள்ளி மாணவிகள் வீட்டுக்கு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். மாணவிகள் சுதந்திரமாக பள்ளிக்கு செல்ல முடியவில்லை. கல்வித்துறை தற்போது பாலியல் வன்கொடுமை துறையாக மாறியுள்ளது. தமிழகம் முழுதும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. அனைத்து பள்ளி வளாகம் முன்பும் கஞ்சா சுலபமாக கிடைக்கிறது. ஆனால் காவல்துறையினரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. காவல் துறையை இயக்கிக் கொண்டிருப்பவர்கள் திமுக நிர்வாகிகள். தமிழகம் முழுவதும் இன்று போதை பொருட்கள் நிரம்பி உள்ளது, இதுதான் இன்று பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளைக்கு காரணமாக உள்ளது” என தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய அவர், “அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் சூறையாடவில்லை. உண்மையிலேயே சூறையாடியது ஸ்டாலினும், காவல்துறையும்தான். திட்டமிட்டே ஓ.பன்னீர்செல்வத்தை கைகூலியாக வைத்துக்கொண்டு போலீஸ் துணையோடு சூறையாடி சீல் வைத்துள்ளனர். காலம் மாறும், இதற்கு நீங்கள் கண்டிப்பாக ஒருநாள் பதில் சொல்லியே ஆக வேண்டும். அ.தி.மு.க.வில் உள்ள 1½ கோடி தொண்டர்களும் ஓ.பி.எஸ். போன்று பச்சோந்திகள் இல்லை, நீங்கள் செய்த துரோகத்தை மறக்க மாட்டோம். நேரம் வரும், சூழ்நிலை மாறும், மீண்டும் பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மலரும். அப்போது ஸ்டாலின் அவர்களே உங்களையும், உங்கள் பிள்ளையையும் பார்ப்போம், அறிவாலயத்தையும் பார்ப்போம், மறக்க மாட்டோம்.

ஓ.பன்னீர்செல்வத்தை வைத்து கலவரம் செய்துவிடலாம், கட்சியை அழித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். அவர் தன்னுடைய சுயநலத்திற்காக எதையும், யாரையும் பலிகொடுக்க தயங்க மாட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்கியது சசிகலா, முதலமைச்சர் பதவியை பறித்த பின்னர் சசிகலா மீது கொலைப்பழி சுமத்தியது ஓ.பி.எஸ். விசாரணை ஆணையம் அமைக்க சொன்னதும் ஓ.பி.எஸ். தனக்கு காரியம் ஆகவேண்டும் என்றால் அவர் எதையும் செய்ய தயங்க மாட்டார்” என தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in