ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுக-வில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ‘நமது அம்மா’ நாளிதழின் நிறுவனர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியுள்ளனர்.
அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்சினையின் காரணமாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகிய இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்கின்றன. பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்த நிலையில் இருதரப்பினரும் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரின் பதவிகளும் ரத்தானதாக சி.வி. சண்முகம் தெரிவித்தார். பொதுக்குழு நடைபெற்றதே செல்லாது எனத் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார். இதனிடையே விழுப்புரத்தில் பகுதியில் உள்ள சுவர்களில் எழுதப்பட்ட ஓபிஎஸ் பெயர் அழிக்கப்பட்டது. மேலும் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் படம் அகற்றப்பட்டது.
ஓபிஎஸ்-ஈபிஎஸ் மோதலின் தொடர்ச்சியாக இன்று வெளியான நமது அம்மா நாளிதழில் ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்டுள்ளது. நேற்று வரை நமது அம்மா நாளிதழின் பதிப்பில் நிறுவனர்கள் என்ற இடத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது. பொதுக்குழுவிற்கு பிறகும் அதே நிலையே தொடர்ந்தது. இந்த நிலையில் இன்று வெளியான நாளிதழில் நிறுவனர் என்ற இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமியின் பெயர் மட்டுமே அப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஈபிஎஸ் தான் ஒற்றைத் தலைமை ஏற்க வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டி தொடங்கி பத்திரிகை முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான செய்திகள் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன.