`அதிமுக சட்டமன்றக் குழுவை மாற்றி அமைக்கக்கூடாது'-சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்!

`அதிமுக சட்டமன்றக் குழுவை மாற்றி அமைக்கக்கூடாது'-சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்!

அதிமுக சட்டமன்ற குழுவை மாற்றி அமைக்கும்படி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிமுக சட்ட விதிகளின்படி இந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவில்லை என்பதால் அந்த பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் அறிவித்தார். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே நேற்று நடைபெற்ற வன்முறை காரணமாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து ஓபிஎஸ் உடனடியாகக் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி அதிமுக கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கு புதிய பொருளாளர் தேர்வு குறித்து கடிதம் எழுதினார். அதேசமயம் ஓபிஎஸ், ‘நான்தான் உண்மையான பொருளாளர். என்னைக் கேட்காமல் வங்கி வரவு, செலவு கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது’ என அந்த வங்கிகளுக்குக் கடிதம் எழுதினார். இதன் தொடர்ச்சியாக அதிமுக சட்டமன்ற குழுவை மாற்றி அமைக்கும் படி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என சட்டப்பேரவை சபாநாயகருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ‘சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர், துணைத்தலைவர், சட்டமன்ற கொறடா உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் அதிமுகவினர் பொறுப்பில் உள்ளனர். அதிமுக பொதுக்குழு அதிமுக சட்ட விதிகளின்படி நடைபெறவில்லை. பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதைச் சுட்டிக்காட்டி அதிமுக சார்பாக சட்டமன்ற பதவிகள் குறித்து மனுக்கள் வந்தால் அதை நிராகரிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார் ஓபிஎஸ்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in