மரியாதை செலுத்த வந்த ஓபிஎஸ்; பெரியார் படத்தை கையோடு எடுத்துச்சென்ற ஈபிஎஸ்: உதவிக்கரம் நீட்டிய அமமுக

மரியாதை செலுத்த வந்த ஓபிஎஸ்; பெரியார் படத்தை கையோடு எடுத்துச்சென்ற ஈபிஎஸ்: உதவிக்கரம் நீட்டிய அமமுக

சென்னை அண்ணாசாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதே நேரத்தில் பெரியார் படத்தை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றது ஓபிஎஸ் ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இதேபோல் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்த தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது பெரியார் சிலைக்கு கீழே அவரது புகைப்படத்தை வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனிடையே, அந்த இடத்துக்கு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்த வந்து கொண்டிருந்தார்.

இதை அறிந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாங்கள் கொண்டு வந்த தந்தை பெரியார் படத்தை கையோடு எடுத்து சென்றுவிட்டனர். இதனால் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்த முடியாமல் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் படம் இல்லாமல் தவித்தனர். இதனிடையே அமமுகவினர் கொண்டு வந்த பெரியார் படத்தை தரும்படி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவர்கள் கேட்டனர். இதைத்தொடர்ந்து தந்தை பெரியார் படத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு கொடுத்தனர். இதையடுத்து, பெரியார் சிலைக்கு கீழே அந்த படம் வைக்கப்பட்டது. இதன் பின்னர் பெரியாருக்கு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ஓபிஎஸ் மரியாதை செலுத்த வந்ததை அறிந்த ஈபிஎஸ், பெரியார் படத்தை எடுத்துச் சென்ற செயல் அதிமுகவினரை முகம் சுளிக்கவைத்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in