விஜயபாஸ்கர், வேலுமணி குறித்து ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்

நாளையும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை
விஜயபாஸ்கர், வேலுமணி குறித்து ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்

ஆறுமுகசாமி ஆணையத்தில் கேட்கப்பட்ட கேள்விகளில் பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என கூறியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் முன்பு இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி வாக்கு மூலம் அளித்தார். அதில், 2016 செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்கு தெரியாது என்றும் நான் சொந்த ஊரில் இருந்த நிலையில் எனது உதவியாளர் மூலம் தெரிந்து கொண்டதாகவும், அடுத்த நாள் பிற்பகல் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவிடம் விவரங்களை கேட்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

விசாரணை ஆணையம் அமைக்க கோரியது யார்? ஆணையம் அமைக்க முடிவு செய்தது குறித்து, ஆறுமுகசாமி ஆணையம் எழுப்பிய கேள்விக்கு, பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆணையம் அமைக்கப்பட்டது என்றும் மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு முன்தினம் மெட்ரோ ரயில் நிகழ்வில் கலந்து கொண்டபோது அவரை பார்த்தேன் என்றும், அதற்கு பின்னர் அவரை பார்க்கவில்லை எனவும் கூறினார்.

மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில், "ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது என்பதை தவிர அவருக்கு வேறு உடல் உபாதைகள் இருந்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய கோப்பில் துணை முதல்வர் என்ற அடிப்படையில் நானும் கையெழுத்திட்டேன். மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது நடைபெற்ற காவேரி கூட்டம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது. அறிக்கை வந்த பிறகு தான் தெரிந்து கொண்டேன். அந்த கூட்டத்தில் பங்கேற்ற அப்போதைய தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவிடம் கூட்டம் தொடர்பாக கேட்டபோது, முதல்வர் தனக்கு டிக்டேட் செய்ததாக கூறினார்.

மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பின்பு, அவரது உடல் நலன் குறித்த தகவல்களை அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் தெரிந்து கொள்வேன். காவேரி கூட்டத்திற்கு பிறகு ஜெயலலிதா இதய பிரச்சினை ஏற்பட்டு உடல் நலனில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது தனக்கு தெரியாது. ஆனால் அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் நான் முதல்வரின் உடல்நிலை குறித்து விஜயபாஸ்கரிடம் கேட்டதற்கு இதய பிரச்சினை இருப்பதாக கூறினார்" என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவிற்கு இதய பாதிப்பு ஏற்பட்டபோது என்ன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும், யாருடைய அனுமதி பெயரில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள் என்பது தொடர்பான கேள்விக்கு, தனக்கு எதுவும் தெரியாது என ஓபிஎஸ் கூறியுள்ளார்.

உணவு இடைவேளைக்கு பின்னர் ஆணையத்தில் ஆஜரான ஓபிஎஸ் தொடர்ந்து ஆணையம் கேட்ட கேள்விகளில் பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என பதில் அளித்தார். "அப்போலோ மருத்துவமனை சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை.

நோயின் தன்மையை பொறுத்து வெளிநாடுகளுக்கு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களிடம் சிகிச்சை அளிக்க அரசியல் பிரபலங்களை உயர்சிகிச்சைக்காக அழைத்து செல்வது தவறு இல்லை என்று கூறினேன். தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதல்வராக பொறுப்பேற்கும் வரை நான் அளித்த பேட்டியில் பேசியது அனைத்தும் சரியானதே. சசிகலாவின் அழைப்பிதழ் பெயரில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவர் சமின் சர்மா, ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்க கூறிய நிலையில், அவர் எந்த சிகிச்சையும் அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் எதுவும் எனக்கு தெரியாது" என்றார்.

ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்ல தடை ஏன்? என்ற கேள்விக்கு, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் அண்ணா, எம்.ஜி.ஆர் போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரிடம் கூறியதாகவும்,

அப்போலோ மருத்துவர்களிடம் கலந்து பேசிய பிறகு வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என சி.விஜயபாஸ்கர் பதில் அளித்தார். மறுநாள் காலை அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி மருமகன் விஜயகுமார் ரெட்டியை சந்தித்து இதே கருத்தை வலியுறுத்தினேன். ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், ஒரு வாரத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என விஜயகுமார் ரெட்டி கூறினார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆணையத்தில் ஆஜரான ராம்மோகன் ராவ் வெளிநாடு அழைத்து செல்வது குறித்து அமைச்சரவையை கூட்ட சொன்னதாகவும், நான்கு நாட்கள் பரபரப்பாக பேசி பின்னர் அமைதியாக இருந்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டி ஆணையம் கேள்வி எழுப்பியது?. இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ராம்மோகன் ராவ் அது தொடர்பாக தன்னிடம் எதுவும் பேசவில்லை எனவும், அவ்வாறு கேட்டிருந்தால் உடனடியாக கையெழுத்து போட்டிருப்பேன் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் ஆகியோர்கள் தான் எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்ததாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in