ஓபிஎஸ்சும், நானும் பிரிந்தது விதியின் சதி: மதுரையில் மனம் திறந்த டி.டி.வி.தினகரன்!

மதுரையில் டி.டி.வி.தினகரன்.
மதுரையில் டி.டி.வி.தினகரன்.ஓபிஎஸ்சும், நானும் பிரிந்தது விதியின் சதி: மதுரையில் மனம் திறந்த டி.டி.வி.தினகரன்!

விதியின் சதியால் நானும். ஓபிஎஸ்சும் பிரிந்தோம். அதிமுகவை மீட்டெடுக்க ஒத்த மனதோடு அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

மதுரை மாநகர் வடக்கு மாவட்ட அமமுகவின் 63-வது வட்டம் சார்பில் அம்மா படிப்பகம் மற்றும் அமமுக கொடியேற்று விழா இன்று நடைபெற்றது. அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " ஒரு டிடிவியும், ஒரு ஓபிஎஸ்சும் இணைந்ததற்கு இப்படி ஏன் பதறுகிறார்கள்? நானும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும் நீண்டகால நண்பர்கள். இடையில் ஏதோ விதியின் சதியால் சிலரின் தவறான தூண்டுதலால் பிரிந்திருந்தோம்.

பணமூட்டையோடு திரிபவர்களை வீழ்த்தி அதிமுகவின் இயக்கத்தை மீட்காமல் ஓயமாட்டோம். அவர்கள் பணபலத்தை மட்டும் நம்பி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதை மீட்டெடுக்கும் பொறுப்பு என்னிடமும், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சிடமும் தொண்டர்களால் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனை நாங்கள் நிச்சயம் உறுதியாக நிறைவேற்றிக் காட்டுவோம்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் குருவியைப் போல 22 பேரை சுட்டுக் கொல்லப்பட்ட போது எடப்பாடி பழனிசாமி அன்று தார்மீக பொறுப்பேற்று பதவி விலகி இருந்தால் இன்று திமுக முதலமைச்சரை பார்த்து கேள்வி கேட்பதற்கு அருகதை அவருக்கு இருந்திருக்கும். தமிழக அரசாங்கத்தின் காவல் துறையின் மெத்தன போக்கால் பத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்துள்ளனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் இனி தமிழ்நாட்டில் நடக்காமல் தடுக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது போதை கலாச்சாரத்தால் மாணவர்கள் உட்பட அனைவரும் சீரழியும் நிலை உள்ளது. ஈபிஎஸ் முதலமைச்சராக இருந்தபோது வடதமிழக மக்களை ஏமாற்றும் வகையில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அரசாணை அறிவித்தது போல ஈபிஎஸ்சுடன் இருக்கும் கட்சிக்காரர்களை ஏமாற்றுவதற்குதான் தேர்தல் ஆணைய உத்தரவுகள் பயன்படும்.

சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பு என்பது தான் இறுதியாக உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. நீதி இருக்கிறது. அதிமுகவை மீட்டெடுக்க ஒத்த மனதோடு அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்" என்றார்.

படம்: நா.தங்கரத்தினம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in