ஈபிஎஸ் பதவியில் வைத்திலிங்கம்... மனோஜ் பாண்டியனுக்கு புதிய பொறுப்பு: அடுத்தடுத்து ஓபிஎஸ் அதிரடி!

ஈபிஎஸ்  பதவியில் வைத்திலிங்கம்... மனோஜ் பாண்டியனுக்கு புதிய பொறுப்பு: அடுத்தடுத்து ஓபிஎஸ் அதிரடி!

‘அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் செயல்படுவார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராக கு.ப. கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் செயல்படுவார்கள்’ என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினையைத் தொடர்ந்து கடந்த 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் உள்ளிட்ட சிலர் பதவிகள் பறிக்கப்பட்டதாக மேடையிலேயே அறிவிப்பு செய்தனர். அடுத்த சில தினங்களிலேயே ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப், வெல்லமண்டி நடராஜன், அழகு மருதுராஜ், கோவை செல்வராஜ் உள்ளிட்ட 18 பேரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பதிலுக்கு ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். இப்படி மாறிமாறி பதவிகள் பறிக்கப்பட்டு வரும் நிலையில் புதிய பொறுப்பாளர்களையும் இருதரப்பினரும் நியமித்து வருகிறார்கள்.

புதிய பொறுப்பாளர் நியமனம் குறித்து ஓபிஎஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து வைத்திலிங்கம் விடுவிக்கப்படுகிறார். மேலும் அவர் கழக இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராக கு.ப. கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in