சைதை சாதிக்கின் சர்ச்சைப் பேச்சு: டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்

சைதை சாதிக்கின் சர்ச்சைப் பேச்சு: டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்

பாஜக நடிகைகள் மீது அவதூறாகப் பேசிய சைதை சாதிக் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஏழு நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்  என தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை கே.கே.நகரில் திமுக சார்பில் கடந்த அக்டோபர் 26-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சைதை சாதிக் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி மன்னிப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக மகளிர் அணியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 29-ம் தேதி புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சைதை சாதிக் மீது ஆபாசமாகப் பேசுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

இதையடுத்து கடந்த 4ம் தேதி தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா ஷர்மாவை சந்தித்த குஷ்பு, சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளார்.  இந்நிலையில், திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு, தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில், “சைதை சாதிக்கின் பேச்சு இந்தியத் தண்டனை சட்டம் 509-ன் படி குற்றமாகும். பெண்களின் நடத்தையை இழிவுபடுத்தும் வகையில்  செயல்படுவது மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றமாகும். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஏழு நாட்களுக்குள் தேசிய மகளிர் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in