
பண்டேல்கண்ட் மாநிலத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவு ஏதும் அரசாங்கத்திடம் வந்துள்ளதா என்ற எழுத்துப்பூர்வ கேள்விக்கு மக்களவையில் பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், புதிய மாநிலம் அமைப்பதற்கான எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என்று தெரிவித்தார்.
மக்களவையில், பண்டேல்கண்ட் மாநில உருவாக்கத்திற்கான முன்மொழிவு ஏதும் அரசாங்கத்திடம் வந்துள்ளதா என்ற எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், “புதிய மாநிலங்களை உருவாக்கக் கோரி பல்வேறு மன்றங்கள் மற்றும் அமைப்புகளின் முன்மொழிவுகள், கோரிக்கைகள் மத்திய அரசாங்கத்தால் பெறப்படுகின்றன. இருப்பினும், புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான எந்த முன்மொழிவும் தற்போது அரசாங்கத்திடம் பரிசீலனையில் இல்லை" என்று கூறினார்.
உத்தரபிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய மலைத்தொடர்களால் சூழப்பட்ட பகுதி பண்டேல்கண்ட் ஆகும். இப்பகுதியில் உலகப்புகழ் பெற்ற கஜிராஹோ கோயில்கள் உள்ளன. இதனை தனி மாநிலமாக அறிவிக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் பல காலமாக போராடி வருகின்றனர்.