
ரூபாய் நோட்டுக்களில் மகாத்மா காந்தி படத்திற்குப் பதில் வீர சாவர்க்கரின் படத்தை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்து மகாசபா கடிதம் எழுதியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், சுதந்திரப் போராட்ட வீரரும், இந்து மகாசபா முன்னாள் தலைவருமான வீர சாவர்க்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சாவர்க்கர் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசுக்கு இந்து மகாசபா சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், " ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்குப் பதிலாக வீர சாவர்க்கர் மற்றும் இதர சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்களைப் பொறிக்க வேண்டும். மேலும், நாடாளுமன்ற கட்டிடத்துக்குச் செல்லும் சாலைக்கு வீர சாவர்க்கர் பெயரைச் சூட்ட வேண்டும். இதுவே சாவர்க்கருக்கு செய்கின்ற உண்மையான அஞ்சலியாக இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.