
தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேச கட்சி போட்டியிடாது என அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் தெலங்கானா மாநிலத் தலைவர் கசானி ஞானேஸ்வர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தெலங்கானா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேச கட்சி போட்டியிடாது என அறிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அந்த மாநிலத் தலைவர் கசானி ஞானேஸ்வர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் தமது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக தெலங்கானா சட்டசபை தேர்தலில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் மாநில கட்சியின் தலைவரான கசானி ஞானேஸ்வர் இதை தெரிவித்துள்ளார். ராஜமுந்திரி மத்தியச் சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கசானி ஞானேஸ்வர் சந்தித்து தெலங்கானா சட்டசபை தேர்தல் தொடர்பாக விவாதித்தார். அப்போது தெலங்கானா சட்டசபை தேர்தலில் இருந்து விலகி இருக்க சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
தெலங்கானா மாநிலத்தில் தற்போது பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திரசேகரராவ் உள்ளார். சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வருவதால் நவம்பர் 30-ம் தேதி ஒரே கட்டமாக மாநிலத்தில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்படுகின்றன. ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு இந்த முறை காங்கிரஸ் கட்சி கடும் போட்டியைக் கொடுக்கும் என கூறப்படுகிறது.