தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்புகள் இல்லை என்றும் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ‘’ நிபா வைரஸைப் பொறுத்தவரை தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. அதே நேரத்தில் கேரளா எல்லையை ஒட்டியுள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தங்களை பரிசோத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.