முதல்வர் ஸ்டாலினுக்கு கார்த்தி சிதம்பரம் திடீர் கோரிக்கை!

முதல்வர் ஸ்டாலினுக்கு கார்த்தி சிதம்பரம் திடீர் கோரிக்கை!

தமிழகத்திற்குப் புதிதாக சட்ட பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தைச் சென்னை மற்றும் திருச்சியில் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, சிவகங்கை நாடாளுமன்ற எம்.பி கார்த்தி சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப் பேரவையும் இயங்கி வருகிறது. தற்போது இந்த புனித ஜார்ஜ் கோட்டையானது மிகவும் பழைய கட்டடமாகவும் போதிய இடவசதி மற்றும் நவீன வசதிகள் இல்லாமலும் செயல்பட்டு வருகிறது.

எனவே புதிதாகவும், இடவசதியோடும், நவீனத் தொழில்நுட்பத்துடன் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய தமிழகத்தின் அடையாளமாக புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தினைக் கட்ட வேண்டும். கூடுதலாக ஒரு சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தினை தமிழகத்தின் மையமான திருச்சியில் அமைத்து, சட்டப்பேரவை நிகழ்வுகளைச் சென்னையிலும், திருச்சியிலும் மாற்றி மாற்றி நடத்த வேண்டும்.

மேலும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தினை சென்னையில் மட்டும் நடத்தாமல், வேறு ஊர்களிலும் நடத்த வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார். கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை, அடுத்து வந்த அதிமுக அரசு மருத்துவமனையாக மாற்றிய நிலையில் புதிய தலைமைச் செயலகம் குறித்து கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இரட்டை தலைமைச் செயலகம் தமிழகத்திற்கு சாத்தியமா என்பதும் விவாதப் பொருளாகி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in