போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் உடனான தொடர்பு குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் ஈரம் ராஜேந்திரன் என்பவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு இந்தியாவிலிருந்து 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தல் குறித்த வழக்கில் போதைப் பொருட்களுடன் மூன்று பேர் கும்பலை டெல்லியில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த மாதம் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் இதற்கு தலைவனாக செயல்பட்டவர் என்பதை கண்டறிந்து அவரையும் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த அவரது கூட்டாளி சதா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு திரைப்பட இயக்குனர் அமீரையும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை செய்தனர்.
அதைத்தொடர்ந்து மத்திய அமலாக்கத்துறை சார்பில் அமீர் வீடு அலுவலகம், ஜாபர் சாதிக்கின் வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் உடனான தொடர்பு குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி புதுவையைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஈரம் ராஜேந்திரன் என்பவருக்கு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
எதிர்வரும் 14 மற்றும் 15 ம் தேதிகளில் டெல்லியில் உள்ள தங்கள் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஈரம் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் ராஜேந்திரன் கடந்த பிப்ரவரி மாதத்தில் தான் காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.