
சென்னையில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது ஆதித்தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். அப்போது, நடைபெற்ற போரட்டத்தில் வன்முறையில் இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அருந்ததியர்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து அவதூறாக பேசி வருவதை கண்டித்து சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை ஆதித்தமிழர் கட்சி அமைப்பின் சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் இன்று 50க்கும் மேற்பட்ட ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கைகளில் கட்சி கொடிகளை ஏந்தியவாறு நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது ஆற்காடு சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும் போலீஸாரின் தடுப்பை மீறி பத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது அங்கிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும், ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினரும் மாறி மாறி கல், பாட்டிலால் வீசி தாக்கி கொண்டனர். பின்னர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டு கையில் சிக்கிய ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகளை சரமாரியாக அடித்து உதைத்து விரட்டி அடித்தனர். இதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது, இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு போர்க்களம் போல் காட்சியளித்தது.
உடனே எஸ்ஆர்எம்சி போலீஸார் இருதரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவம் குறித்து எஸ்ஆர்எம்சி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.