ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுகவின் இரு அணிகளும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி,செங்கோட்டையன் உள்ளிட்டோர் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சிப்பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோரை சந்தித்து ஆதரவு கேட்டனர்.
சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், ``பழனிசாமி, பன்னீர்செல்வம் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். தன்னை சந்திக்க வரும் ஓ.பன்னீர்செல்வத்திடம் அணிகள் இணைப்பை வலியுறுத்துவேன். இரட்டை இலை சின்னம் யாரிடம் உள்ளதோ அவர்களுக்கே எனது ஆதரவு என திட்டவட்டமாக தெரிவித்துள்ளேன்'' என கூறினார்.
``எடப்பாடி பழனிசாமி அணியினரே தொடர்ந்து தொடர்பில் உள்ளதால் அவர்களுக்கே எங்கள் ஆதரவு. மாலையில் சந்திக்க வரும் ஓ.பன்னீர் செல்வம் அணியினரிடமும் இதனை கூறவுள்ளேன்'' என பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்தார்.