மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவிவகிக்கும் 72 பேர் இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெறவிருக்கின்றனர். அவர்களுக்குப் பிரிவுபச்சார நிகழ்ச்சி இன்று (மார்ச் 31) காலை மாநிலங்களவையில் நடந்தது. அப்போது, அனைத்துக் கட்சி எம்.பி-க்களுடனும் பிரதமர் மோடி மனம் திறந்து அளவளாவினார்.
ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா, சுரேஷ் பிரபு, சுப்பிரமணியன் சுவாமி, சஞ்சய் ராவத் எனப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அவர்களில் 65 பேர், 19 மாநிலங்களின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். மற்றவர்கள் நியமன உறுப்பினர்கள்.
பிரதமர் மோடி அவர்களிடம் உரையாடி, புகைப்படம் எடுத்துக்கொண்டார். திமுக எம்.பி திருச்சி சிவா, தேசியவாத காங்கிரஸ் எம்.பி சரத் பவார் போன்ற தலைவர்களிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேயிடமும் புன்சிரிப்புடன் உரையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது, காங்கிரஸ் உறுப்பினர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, அவை சுமுகமாக நடைபெற அனுமதிக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கேயிடம் பிரதமர் மோடி கூறினார். உடனே, “கேள்வி கேட்பது காங்கிரஸ் கட்சி எம்.பி-க்களின் கடமை. பதில் சொல்வது பிரதமராகிய உங்களுக்கும் உங்கள் அரசுக்குமான கடமை” என்று நகைச்சுவையுடன் பதிலளித்தார் கார்கே. இருவரும் சிரித்துக்கொண்டனர்.
பின்னர் எம்.பி-க்களிடம் பேசிய மோடி, பலர் நீண்ட காலம் உறுப்பினர்களாக இருந்து சிறந்த நாடாளுமன்ற அனுபவத்தைப் பெற்றவர்கள் என்று கூறியதுடன், மீண்டும் நாடாளுமன்றத்துக்கு எம்.பி-க்களாகத் திரும்பிவர வேண்டும் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.