
கன்னியாகுமரியில் திமுகவின் எழுத்தாளர் குழு சார்பில் பேனா வடிவிலான ’முத்தமிழ்த் தேர்’ அலங்கார ஊர்தியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த ஊர்தியில் 3டி வடிவிலான புகைப்படக் கண்காட்சியும் இடம்பெற்றுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் 12 குழுக்களை அமைத்தார். அந்த குழுக்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அரசியல், திரைத்துறை, சமூகநீதி பங்களிப்பை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுகவின் எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் குழு சார்பில் முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அலங்கார ஊர்தியை அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முரசு கொட்டி அலங்கார ஊர்தி பயணத்தை தொடங்கி வைத்தனர்.
முன்னாள் முதல்வரின் கலையுலக பங்களிப்பு மற்றும் அவரது அரசியல் பங்களிப்பு குறித்து இன்றைய தலைமுறையினர் அறிந்துக் கொள்ளும் வகையில், இந்த ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்தியில் 3டி தொழில் நுட்பமும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தி பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது
‘எழுத்தே எனது மூச்சு, எழுதுவதே எனது தினப்பழக்கம்’ என முழங்கிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் பயன்படுத்திய பேனா வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம் தமிழகம் முழுவதும் ஒரு மாதம் பயணிக்கவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.