பொங்கல் பரிசு தொகையில் கரும்பும் சேர்த்து வழங்க உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வருக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசு தொகையில் கரும்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு அரிசி வெள்ளம் ஆயிரம் ரூபாய் பணம் மட்டுமே வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது. இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தாங்கள் அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பு பயிரிட்டுள்ளதாகவும், அதனால் அரசு பரிசு பொங்கல் பரிசு தொகையில் கரும்பு சேர்த்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கரும்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தன.
இந்த நிலையில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று தமிழக அரசின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்
இது குறித்து அவர் கூறுகையில், ``பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகள்! ஒவ்வொரு ஆண்டும் கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் கரும்பு கொள்முதல் செய்யப்படும். இம்முறையும் எமது விவசாயிகளின் கரும்பு தமிழகமெங்கும் இனிக்க அரசு ஆவண செய்ய வேண்டும். முழுவதும் விவசாயம் சார்ந்த எமது மக்களுக்கு இதுவே பொங்கல் பரிசு'' என்று தெரிவித்தார்.