ஒன்றரை லட்ச ரூபாய் பணமோசடி செய்ததாக தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக பொருளாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், இலஞ்சியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக பொருளாளராக உள்ளார். இவர் மேலகரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் உள்ளார். இந்த கூட்டுறவு சங்கத்தின் சார்பில் மேலகரம் பகுதியில் கடைகள் கட்டி வாடகைக்கு விட ஏற்பாடு நடந்துள்ளது. அதில் வாடகைக்கு கடை ஒதுக்குவதாகச் சொல்லி செங்கோட்டையைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரிடம், சண்முகசுந்தரம் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
ஆனால் சொன்னதுபோல் காளிதாஸ்க்கு கடை ஒதுக்கவில்லை. அத்துடன் பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து காளிதாஸ் செங்கோட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி குற்றாலம் போலீஸார், அதிமுகவின் மாவட்டப் பொருளாளரும், கூட்டுறவு சங்கத் தலைவருமான சண்முகசுந்தரம் மீது பண மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.