தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.23-ம் தேதி பிரதமர் மோடி அயோத்தி செல்கிறார்.
இந்தியா முழுவதும் அக்.24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவுக்கு அக்.23-ம் தேதி பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது பகவான் ஸ்ரீராம்லாலா விராஜ்மானுக்கு மோடி பூஜை செய்து வழிபட உள்ளார்.
இதையடுத்து பிரமாண்டமாக கட்டப்படும் ராமர் கோயில் கட்டுமானப்பணிகளை அவர் ஆய்வு செய்கிறார். பின்னர் பகவான் ஸ்ரீராமருக்கு ராஜ்யாபிஷேகத்தை பிரதமர் மேற்கொள்கிறார். சரயு நதியின் புதிய படித்துறையில் ஆரத்தியை பார்வையிடுகிறார். அத்துடன் பிரம்மாண்ட தீப உற்சவ கொண்டாட்டத்தையம் மோடி தொடங்கிவைக்கிறார்.
இந்த ஆண்டு 6-வது தீப உற்சவத்தில் முதல் முதலாக பிரதமர் இதில் நேரடியாக கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்றப்படுகின்றன. தீப உற்சவத்தின் போது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு நடன வடிவிலான 11 ராம்லீலா மற்றும் 5 அனிமேஷன் வடிவிலான அலங்கார வாகனங்கள் இடம்பெறும். மேலும் சரயு நதியில் கரைகளில் பிரம்மாண்டமான இசை லேசர் காட்சிகளுடன் முப்பரிமாண ஹோலோ கிராபிக்ஸ் காட்சிகளையும் பிரதமர் மோடி பார்வையிடுகிறார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.