ஜனநாயகத்தை சிதைக்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்ததாகவும், முகாலய பேரரசர் அவுரங்கசீபை பாராட்டுவோருடன் கூட்டணி அமைத்திருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை ஒட்டி கர்நாடகா மாநிலத்தில் இன்று 4 தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். பெலகாவி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர் காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசும் போது, “காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தை சிதைக்க திட்டமிட்டு இருந்தது. முகாலய பேரரசர் அவுரங்கசீபை பாராட்டுபவர்களுடன் அந்தக் கட்சி கூட்டணியில் இருந்தது. மக்களின் பணத்தை எடுத்து அதனை தங்களின் வாக்கு வங்கியினருக்கு மறு விநியோகம் செய்ய, காங்கிரஸ் ஆட்சி அமைக்க விரும்புகிறது” என்றார்.
மேலும், ”எம்சிஏ மாணவி நேகா கொலை வழக்கில் உண்மைகளை வெளிக்கொண்டுவர அவர்கள் விரும்பவில்லை. மாறாக அவர்களின் வாக்கு வங்கியை சமாதானப்படுத்துவதிலேயே அவர்கள் குறியாக இருந்தனர். நேகா போன்றவர்களின் உயிர்கள் குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் எப்போதும் அவர்களின் வாக்கு வங்கியை குறித்து மட்டுமே கவலைப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சி தேசிய நலன் என்பதை தாண்டி ஒரு குடும்பத்தின் நலன் என்ற குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டு விட்டது. ” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”காலனி ஆதிக்கத்தின் போது இருந்த குற்றவியல் சட்டங்களை பாஜக அரசு அகற்றியுள்ளது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டங்கள் மூலமாக குற்றவாளிகளுக்கான தண்டனையை விட பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை முதன்மைப்படுத்தியுள்ளோம். தீவிரவாதத்திற்கு எதிரான சட்டங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தவர்களுக்கு கொடுமை இழைக்கும் சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிய சட்டங்களில் மின்னணு சாட்சியங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் பயனளிக்க துவங்கி விட்டது.” என்று அவர் பேசினார்