தமிழகத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக சாடி உள்ளார்
திமுக, அதிமுக என 2 கழகங்கள் மீதும் ஒருசேர பாய்ந்திருக்கும் கமல், “ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் திமுகவும், பணபலம் கொண்ட அதிமுகவும் தேர்தல் ஜனநாயகத்தை தமிழகத்தில் கேலிக்கூத்தாக்கி விட்டன” என காட்டம் காட்டியுள்ளார்.
மேலும், “அனைத்து வார்டுகளிலும் பணமும் பரிசுப் பொருட்களும் வினியோகம் ஆனது. வெளியூரில் இருக்கும் வாக்காளர்கள் பணமளித்து வரவழைக்கப்பட்டார்கள். வேட்பாளர்கள் மிரட்டப்பட்டார்கள். பிரச்சாரத்திற்குச் செல்கையில் அடித்து விரட்டப்பட்டார்கள். தேர்தல் நாளில் வாக்குச் சாவடியிலே பணம் வினியோகம் செய்யப்பட்டது. உச்சகட்ட அநீதியாக வாக்குச்சாவடிகளின் கதவுகளைப் பூட்டிக்கொண்டு கள்ள ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் இச்செயல்களை தேர்தல் அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை.
தங்கள் வாக்கைப் பதிவு செய்யவந்த மாற்றுகட்சி வேட்பாளர்களை வாக்காளர்கள் என நினைத்து பணம் கொடுக்க முயன்றது அவல நகைச்சுவை. உள்ளாட்சிப் பதவிகளைக் கைப்பற்றி மக்கள் பணத்தை துளி விடாமல் உறிஞ்சுவிடத் துடிக்கும் கழகங்களில் ஊழல்வெறிக்கு ஜனநாயகம் பலியாகியுள்ளது. தேர்தல் அத்துமீறல்களை மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயமானதாக இருக்க முடியும்” என்று தனது ட்விட்டர் பதிவில் கமல்ஹாசன் சீறி உள்ளார்.
தங்களது குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையத்திடம் முறையிடும் வகையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று(பிப்.20) போராட்டம் நடைபெற்றது. கண்களில் கறுப்புத் துணி கட்டிய கட்சியினர், தேர்தல் ஆணையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அதிகாரிகளிடம் அளித்தனர்.