
மக்கள் நீதி மய்யம் கட்சியின் இணையதளம் ஹேக்கர்கள் பிடியில் சிக்கியுள்ளதாக, கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ இணையதளமான ’மய்யம்’ பக்கத்தில் இன்று வெளியான தகவலால் பரபரப்பு எழுந்தது. ஜன.30 அன்று மக்கள் நீதி மய்யம் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் இணையக்கப்பட இருப்பதாக அக்கட்சியின் சார்பிலான விரிவான தகவல் ஒன்று அதில் இடம்பெற்றிருந்தது. பொதுவெளியில் இது குறித்தான தகவல்கள் எழுந்ததில் அரசியல் களமும் பரபரப்பானது.
ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்றது முதல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தது வரை, மக்கள் நீதி மய்யம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவற்றில் ஒன்றாக ’2024 மக்களவை தேர்தல் சமீபத்தில் தனது கட்சியை காங்கிரஸ் உடன் கமல்ஹாசன் இணைக்க உள்ளார்’ என்பதும் அடங்கும்.
இந்த தகவலை உறுதிப்படுத்துவது போலவே, இன்றைய மக்கள் நீதி மய்யம்கட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தகவலும் வெளியானது. ஆனால் சமூக ஊடகங்கள் வாயிலாக கட்சியினர் மற்றும் ஊடகங்களை தொடர்பு கொண்ட மக்கள் நீதி மையத்தினர், கட்சியின் அதிகாரபூர்வ தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் வெளியான தகவலும் ஹேக்கர்களின் கைவரிசை என்றும் விளக்கம் தரப்பட்டது.
இந்த செய்தி பதிவிடப்படும் வரை மையம் இணையதளம் இயல்புக்கு திரும்பவில்லை. பராமரிப்பு பணிகள் தொடர்பான தகவல் ஒன்று மட்டும் வலைதள பக்கத்தில் வெளியாகி உள்ளது. நிஜமாலுமே ஹேக்கர்களின் கைவரிசையா அல்லது பின்னர் அறிவிப்பாக இருந்த தகவல் முன்கூட்டியே தவறுதலாக இடம்பெற்று விட்டதா என்பது உள்ளிட்ட விவாதங்கள் பொதுவெளியில் ஓடிக்கொண்டிருக்கின்றன.