முதல்வர் வருகையை முன்னிட்டு குறைதீர் கூட்டத்தை ரத்துசெய்யக் கூடாது!

மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
கிஷோர் குமார்
கிஷோர் குமார்

மக்களுக்கான முதல்வர் திருச்சி வரும்பொழுது அதைக் காரணம் காட்டி திருச்சி மாநகராட்சியில் மக்கள்  குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது ஏற்புடையது அல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டித்துள்ளது. 

இது பற்றி அக்கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கூறுகையில், “திமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காத மக்களுக்குமான அரசு என மேடை தோறும் முழங்கி வருகிறார் தமிழக முதல்வர்.  ஆனால் தமிழக முதல்வர் நாளை (நவ.28) திருச்சி வருகை தரவிருப்பதைக் காரணம் காட்டி திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடக்க இருந்த  குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது  ஏற்புடையதாக இல்லை” என்றார்.

மேலும், “கடந்த காலங்களில் இதேபோன்று மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டபோது  மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் சுட்டிகாட்டியதோடு மேயர் மற்றும் ஆணையர் அலுவல் பணியில் இருந்தால் அடுத்த நிலையில் உள்ள மாநகராட்சி அதிகாரிகளைக் கொண்டோ அல்லது அடுத்த வேலை நாட்களிலோ  மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை நடத்த கோரிக்கை விடுத்தோம்.

ஏனெனில் இவ்வாறுதான் மாவட்ட ஆட்சியர் மாற்று அலுவல் பணியில் உள்ள பொழுது டிஆர்ஓ ரேங்க் அதிகாரி தலைமையில் மாவட்ட ஆட்சியரகங்களில் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது.  எனவே  அதே நடைமுறையைப் பின்பற்றி  திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டத்தை நாளை நடத்த வேண்டும்” என்று  கிஷோர்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in