
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் எங்கள் ஆதரவு திமுக கூட்டணிக்குத்தான் என்று மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் கோவை குனியமுத்தூரில் நேற்று (நவ.14) நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேசினார். அப்போது, "அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் பாதுகாக்க வலியுறுத்தி, டிசம்பர் 6-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தோழமைக் கட்சிகள், அமைப்புகள் ஆதரவுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மத்திய அரசின் திசையை மாற்றும் தேர்தலாக இருக்கும். இந்தியா கூட்டணி ஏற்கெனவே 3 முறை ஒன்று கூடி ஆலோசித்துள்ளது. இந்தியா கூட்டணியை வலுப்படுத்த காங்கிரஸ், பிற கட்சிகளையும் கூட்டணியில் இணைக்க முழு முயற்சி எடுக்க வேண்டும்.
வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். பாஜகவில் இருந்து அதிமுக வெளியேறி விட்டதாக காட்சிகள் அரங்கேற்றப்படுகிறது. இதுவரை மத்திய அரசுக்கு எதிரான எந்த கருத்தையும் எடப்பாடி பழனிசாமி முன் வைக்கவில்லை.
மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியையே நாங்கள் ஆதரிக்கிறோம். தேர்தலில் போட்டியிட எங்களுக்கு ஒரு தொகுதியை திமுக ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.
நீண்ட காலமாக சிறையில் இருக்கும் சிறைவாசிகள் 20 பேரை நீண்ட விடுப்பில் விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது. ஆனால், ஆளுநர் அந்த கோப்புகளைக் கிடப்பில் போட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வரும் சட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போடும் ஆளுநரால், ஒரு பேரூராட்சி தேர்தலிலாவது நின்று வெற்றி பெற இயலுமா?
நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது. தமிழக மக்களின் வரிப் பணத்தில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் யார் படிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நீட் தேர்வின் நிலை குறித்து பொது மக்கள் மற்றும் மாணவர்களிடம் கொண்டு செல்லும் பணியை செய்து வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுகள்" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்; 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
மீண்டும் விலை உயரும் அபாயம்: தொடர்மழையால் செடியிலேயே அழுகும் தக்காளி!
மீண்டும் மீண்டுமா... அடுத்த சிக்கலில் மாட்டித் தவிக்கும் சிவகார்த்திகேயன்!
பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
கிராமத்தில் 20 முறைக்கும் மேல் மின்தடை: அதிகாரிகளைப் பழிவாங்க கவுன்சிலர் செய்த அதிர்ச்சி காரியம்!