2011-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தாசில்தாரை தாக்கியது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி படிக்கட்டில் தவறி விழ முயன்றார். அவரின் கையை பிடித்து உடன் வந்த திமுகவினர் காப்பாற்றினர்.
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது மதுரை மாவட்டம், மேலூரில் மு.க.அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது, பணம் பட்டுவாடா செய்ததாக அதிமுகவினர் தேர்தல் அலுவலரிடம் புகார் கூறினர். இதையடுத்து, வீடியோ கேமராவுடன் அங்கு சென்ற மேலூர் தேர்தல் அலுவலரும், தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் உள்பட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன் உள்பட 20 பேர் ஆஜராகினர். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது.
முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த மு.க.அழகிரி வெளியே வந்தார். அப்போது, படிக்கட்டியில் இறங்கியபோது அழகிரி தடுமாறி கீழே விழ முயன்றார். அப்போது, உடன் வந்த திமுகவினர் அவரது கையை பிடித்து கீழே விழாமல் காப்பாற்றினர்.