மின்கட்டணம் குறித்து தவறான கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள்: அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

மின்கட்டணம் குறித்து தவறான கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள்: அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

மின் கட்டணங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களைப் பொதுமக்கள் நம்பக்கூடாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக சென்னை தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம், சென்னை மாநகர மின் கட்டுபாட்டு மையம் மற்றும் 24 மணி நேர மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகம் ஆகியவற்றை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் மின் விநியோகத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் வந்துவிடக் கூடாது என்று முதல்வரின் உத்தரவின்படி சீரான மின் விநியோகம் வழங்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிச்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாத அளவிற்கு தொடர்ந்து சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று 14,433 மெகாவாட் என்று இருந்த மொத்த தமிழகத்தின் பயன்பாடு இன்று மழையின் காரணமாக 12,400 மெகாவாட் அளவிற்கு குறைந்திருக்கின்றது.

இந்த 12,400 மெகாவாட்டில் 4,100 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகள் மூலமும், சூரிய மின் உற்பத்தி 2,250 மெகாவாட் அளவிற்கும் உள்ளன. எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரை மழையின் காரணமாக எந்தவித பாதிப்பும் இல்லாமல் சீரான மின் விநியோகம், தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. காற்றாலைகளைப் பொறுத்தவரை கடந்த 2020-21-ம் ஆண்டு 12,555 மில்லியன் யூனிட் உற்பத்தி என்பது 2021-22-ம் ஆண்டு 13,120 மில்லியன் யூனிட் என்ற அளவிற்கு கூடுதலாக மின் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றது.

அதேபோல சூரிய மின் உற்பத்தியைப் பொறுத்தவரை 2020-21-ம் ஆண்டு 6,115 மில்லியன் யூனிட் என்பது 2021-22-ம் ஆண்டு 7,203 மில்லியன் யூனிட் அளவிற்கு உற்பத்தி அதிகரிக்கப்பட்டு முழுவதுமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தமிழகத்தினுடைய தேவை என்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரக்கூடிய இந்த சூழ்நிலையில் ஒட்டு மொத்த தேவையும் அதிகரிக்கின்றன.

கடந்த 2020-21-ம் ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மின் உற்பத்தி செய்யப்பட்டு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு அதற்கான மின் விநியோகம் முழுவதுமாக வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த 2020-21ஆம் ஆண்டு 1,06,943 மில்லியன் யூனிட் தமிழகம் முழுவதும் நுகர்வு செய்யப்பட்டிருகின்றது. அதில் 2021-22-ம் ஆண்டு அதிகபட்சமாக இதுவரை மின்சார வாரியம் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 1,17,261 மில்லியன் யூனிட்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டிருக்கின்றன. மின் உற்பத்தி தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த பாதிப்பும் இல்லாமல் தமிழகத்தில் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

இல்லாத ஒரு மின் கட்டணத்தை இருப்பது போலவும், மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லாத இடங்களில் பாதிப்பு இருப்பது போலவும் தவறான கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். பொதுமக்கள் அரசு நிர்ணயித்துள்ள மின் கட்டணங்களை தெரிந்துகொள்ள வேண்டும். மின் கட்டணங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பக்கூடாது. தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி வீடுகளுக்கான நிலைக்கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மருக்கு போட வேண்டிய டீடி மீட்டர் பொருத்திய பின் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடியும். டீடி மீட்டர் பொருத்துவதற்கு, டிபிஆர் தயார் செய்யப்பட்டு, டெண்டர் விடப்படும் நிலையில் உள்ளது.டீடி மீட்டர் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டவுடன், ஸ்மார்ட் மீட்டர் பணிகள் தொடங்கப்படும் " என்று அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in