அண்ணா, கலைஞர், ஸ்டாலின் வழியில் மக்கள் பணி ஆற்றுவேன் - கருணாநிதி இல்லத்தில் கையெழுத்திட்ட உதயநிதி

கருணாநிதி பிறந்த இல்லத்தில் உதயநிதி
கருணாநிதி பிறந்த இல்லத்தில் உதயநிதி

அமைச்சராக பதவி ஏற்றபிறகு முதல் முறையாக கருணாநிதியின் பிறந்த ஊரான  திருக்குவளை வருகை தந்த  அமைச்சர் உதயநிதிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக  உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இன்று  திருக்குவளைக்கு  வருகை தந்தார். திருவாரூரில் இருந்து சாலை மார்க்கமாக  திருக்குவளை வந்த அவருக்கு  மாவட்ட எல்லையான கொளப்பாடு பகுதியில் திமுக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர்  அருண்தம்புராஜ் அவரை வரவேற்று  மாபெரும் தமிழாற்று  படை  என்ற நூலை பரிசாக வழங்கினார்.  

திருக்குவளையில் உள்ள கருணாநிதியின் குலதெய்வ கோயிலான  அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் உதயநிதிக்கு பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டது.

பூரண குண்டம் மரியாதை
பூரண குண்டம் மரியாதை

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி பிறந்த இல்லத்தில் உள்ள தனது  தாத்தா கலைஞர் கருணாநிதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரான முரசொலி மாறன், கொள்ளு தாத்தா முத்துவேலர்,  கொள்ளு பாட்டி அஞ்சுகம்  ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பார்வையாளர்கள் வருகை பதிவேட்டில், 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சார துவக்கத்தை  2020 நவம்பர் 20-ம் தேதி தலைவர் பிறந்த திருக்குவளை இல்லம் முன்பாக தொடங்கி கைதானோம். இன்று அமைச்சராகி முதல் முறை மீண்டும் வருகை புரிந்துள்ளேன்‌. பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் வழியில் மக்கள் பணி ஆற்றுவேன் என எழுதி கையெழுத்திட்டார்.

உதயநிதியின் வருகை பதிவு
உதயநிதியின் வருகை பதிவு

அவருடன் அமைச்சர்கள் மெய்யநாதன், சக்கரபாணி மற்றும்  நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளர் கௌதமன், டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் உள்ளிட்டவர்கள்  கலந்து கொண்டனர்.

அமைச்சர் வருகையை முன்னிட்டு எஸ்பி ஜவகர் தலைமையில் 1 ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பி, 6 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 12 உதவி காவல் ஆய்வாளர்கள்,108 காவலர்கள் மற்றும் ஊர் காவல்படையினர் 71 பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in