என் தலையை சீவ 10 கோடி ரூபாய் எல்லாம் வேண்டாம். 10 ரூபாய் சீப்பு போதும் என உதயநிதி ஸ்டாலின் சாமியார் பரம்ஹன்ஸாவை கலாய்த்த நிலையில், உதயநிதியின் தலைக்கு பத்து கோடி ரூபாய் பத்தாது என்றால், கூடுதலாக தரவும் தயார் என்று அயோத்தி சாமியார் மீண்டும் மிரட்டியுள்ளார்.
சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும்.
அந்த வகையில், சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும் என்று தெரிவித்தார். டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக்கூடாது ஒழித்து கட்ட வேண்டும். அதைப்போல தான் இந்த சனாதனமும். அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு இந்து அமைப்புகளும், பாஜகவினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவரது பேச்சு தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பரமஹம்ச ஆச்சார்யா எனும் அயோத்தி சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
’’ரூ.10 கோடியெல்லாம் வேண்டாம். 10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும், நானே என் தலையை சீவிக்கொள்வேன்'’ என உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்து சாமியார் கோபத்திற்கு ஆளான நிலையில் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு ரூ.10 கோடி பத்தாது என்றால் கூடுதலாகத் தரவும் தயார் என்று பரமஹம்ச ஆச்சார்யா பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். சேன்னையில் அமைச்சர் உதயநிதியின் வீட்டிலும், அலுவலகத்திலும் போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.