
எடப்பாடி பழனிசாமி சொல்வது போல திமுக உண்ணாவிரதப் போராட்டம் நாடகமாகவே இருக்கட்டும், நீட் வேண்டாம் என்பதுதான் அவர்களின் கொள்கை. அவர்களும் எங்களுடன் வந்து கலந்து கொள்ளட்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின், தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ஐந்து நாள் நடைபெறும் மாநில இளைஞர் திருவிழா - 2023 (State Youth Festival - 2023) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள என்சிசி,என்எஸ்எஸ் மாணவர்களுக்கு மாநில அளவில் இளைஞர் திருவிழா சென்னையில் தொடங்கியுள்ளது. 250-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் புகைப்படக் கண்காட்சி, பேச்சு போட்டிகள் என பல போட்டிகள் நடைபெறுகிறது.
டெல்லியில் குடியரசு தின விழா உள்ளிட்ட அணி வகுப்பில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மூன்று நாட்கள் ரயிலில் பயணம் செய்து பங்கேற்க வேண்டியுள்ளது. இனி இவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் போராட்டம் நாடகமாகவே இருக்கட்டும் அதிமுகவும் தானே நீட் வேண்டாம் என்கிறார்கள். அவர்களும் இந்த நாடகத்தில் பங்கேற்கட்டும். நீட் விலக்கு அளித்தால் அதற்கான பாராட்டை அதிமுகவே எடுத்துக் கொள்ளட்டும். இதை அரசியலாகப் பார்க்காமல் இனி நாம் மாணவர்களை இழக்கக் கூடாது என்ற உணர்வாக பார்க்க வேண்டும்" என்றார்.