`இது குறித்து மக்களிடம் கருத்து கேட்பாரா?'- அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி கேள்வி

`இது குறித்து மக்களிடம் கருத்து கேட்பாரா?'- அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி கேள்வி

`பாஜக தலைவர் அண்ணாமலை தனது கை கடிகாரம் வாங்கியதற்கான பில்லை இன்று மாலைக்குள் வெளியிடுவாரா? மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு குறித்து மக்களிடம் கருத்து கேட்கும் அண்ணாமலை பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சிலிண்டர் மானியம் ரத்து குறித்தும் மக்களிடம் கருத்து கேட்பாரா? என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த மாதம் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 50,000 இலவச மின் இணைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை மின் வாரிய அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "இலவச மின்சாரம் கேட்டு பதிவு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு ஏற்ப ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஏற்கெனவே விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின்சாரம் வழங்கி உள்ள நிலையில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கடந்த நவம்பர் 11-ம் தேதி 20 ஆயிரம் விவசாயிகளுக்கும் மின் இணைப்பு முதலமைச்சர் தலைமையில் வழங்கப்பட்டது. தற்போது வரை 34,134 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 ஆயிரத்து 866 பேருக்கு பொங்கலுக்கு முன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாகனம் தாக்கப்பட்டு குறித்த கேள்விக்கு, கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் 12 உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் வரவில்லை. வாக்குப்பதிவு நடத்தி வாக்கு எண்ணலாம். ஆனால் முடிவு அறிவிக்கப்பட கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் மேற்கொண்டு எதையும் தெரிவிக்க முடியாது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், மின் இணைப்பு உடன் ஆதார் எண் இணைக்கும் பணியில் 1 கோடியே 70 லட்சம் பேர் நேற்று வரை இணைதுள்ளனர். வீடு வாரியாக கணக்கு எடுக்க பணியாளர் நியமனம் செய்யப்பட வேண்டும். இப்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கு எடுக்க உள்ளார்கள். ஸ்மார்ட் மீட்டர் பொருத்த டெண்டர் விடப்பட உள்ளது. அது 2 ஆண்டுகளுக்கு உள்ளாக முடிக்கப்பட்டு விட்டால் கூட கூடுதலாக வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட்டால் அவர்களுக்கு பின்னர் என்ன வேலை தருவது என்ற குழப்பம் வரும். எனவே ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடிய பணிகள் முடிவடைந்த பின்னர் மாதந்தோறும் மின் அளவு கணக்கீடு செய்யப்படும்.

தற்போதைய மின் தேவை 2021-ம் ஆண்டில் 32,000 மெகாவாட் உற்பத்தி தேவையாக உள்ளது. 2030-ம் ஆண்டிற்குள் 65 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்ற வருகிறது. இது தற்போதையுள்ள தேவையை விட இரண்டு மடங்கு அதிகம். மத்திய அரசு நிலக்கரி இறக்குமதிக்கு நிர்ணயம் செய்துள்ள விலையை விட குறைந்த அளவில் தமிழக அரசு நிலக்கரியை 133 டாலர் தான் இறக்குமதிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தமிழக அரசு சிறப்பாகவும் பல்வேறு துறைகளும் வெளிப்படையாக செயல்பட்டு வரும் நிலையில் தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை ஆதாரம் இல்லாமல் பாஜக தலைவர் பேசிய வருகிறார்.

நான் கேட்ட கேள்வி, வாங்கிய கடிகாரத்திற்கு பில் உள்ளதா என்று தான். தேர்தலுக்கு முன் வாங்கினாரா இல்லை பின்னரா என்றால், பில்லை காட்ட சொல்லுங்கள். மடியில் கணம் இல்லை என்றால் வழியில் பயம் இருக்காது. மடியில் கணம் உள்ளது. நீ முதலில் உண்மையாக இரு. பாஜகவினர் வார் ரூம் போட்டு தொழிலதிபர்களை மிரட்டி வருகிறார்கள். மின்சார துறை மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால் மின்வாரியம் சரி செய்ய தயாராக இருக்கிறது.

பாஜக தலைவர் அண்ணாமலை முடிந்தால் இன்று மாலைக்குள் அந்த நபர் அந்த கடிகாரத்திற்கான ரசீதை வெளியிட வேண்டும். எந்த கடையில் எந்த விலைக்கு வாங்கினார் என்ற ஆதாரத்தை வெளியிட வேண்டும். மேலும் அந்த கடிகாரம் யாரிடமோ வெகுமதி வாங்கியது. அதற்கான பில்லை இன்று மாலை வெளியிட வேண்டும். அந்த கடிகாரத்திற்கான பில் தற்போது தயாரிக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை வெளியிடும்போது அடுத்தகட்ட குற்றச்சாட்டுகளை தான் தெரிவிக்கிறேன்" என்றார்.

பாஜகவினர் எழுப்பிய கேள்வி குறித்த பதிலுக்கு தமிழகத்தில் இல்லாத ஒரு கட்சியில் உள்ள நபர்கள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என தெரிவித்தார் செந்தில் பாலாஜி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in