பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் மாநிலத் தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் மாநிலத்தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ், ‘நாவலர் நெடுஞ்செழியன், அய்யா அரங்கநாயகம், இனமான பேராசிரியர் அன்பழகன், அண்ணன் தங்கம் தென்னரசு ஆகியோர்களின் வரிசையில் தற்போது நான் சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.
என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் இயக்கத்தினருக்கு எனது நன்றிகள். பாரத சாரண, சாரணியர் இயக்கத்தில் நடைபெற்ற குடியரசுதின விழாவில் சொன்னது போல் சாரண, சாரணியர் இயக்கம் பெரும்பாலான பள்ளிகளில் ஏற்படுத்தப்படும். முதல்வர் அவர்களின் அறிவுறித்தல்படி இயக்கத்தினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
இதற்கு முன்பு இப்பதவிக்கு போட்டியிட்ட பாஜகவின் எச்.ராஜா சுமார் 80 வாக்குகள் மட்டுமே பெற்று தோற்றுப் போனார். அதிலிருந்து தான் சாரண, சாரணியர் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பதவியும் மிகவும் பிரபலம் ஆனது குறிப்பிடத்தக்கது. இப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் அதே பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.