`குடும்ப அரசியல் குறித்துப் பேச தமிழிசைக்கு தகுதியே இல்லை'- கொந்தளித்த அமைச்சர் சா.மு.நாசர்

`குடும்ப அரசியல் குறித்துப் பேச தமிழிசைக்கு தகுதியே இல்லை'- கொந்தளித்த அமைச்சர் சா.மு.நாசர்

‘தமிழிசை குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள். அவர் குடும்ப அரசியல் குறித்துப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது’ என அமைச்சர்  நாசர் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலினும், பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர். பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், துணைப் பொதுச் செயலாளராகக் கனிமொழி தேர்வு செய்யப்பட்டார். இது குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “தமிழக அரசியலைப் பொறுத்தவரை ஒரு பெண் உயர்வான இடத்திற்கு வருவது மிகவும் சிரமமான விஷயம்தான். அந்த இடத்திற்கு வந்திருக்கும் கனிமொழிக்கு வாழ்த்துகள். அதே நேரம் இது வாரிசு அரசியலின் அடையாளமாகிவிடுமோ என மக்கள் நினைக்கிறார்கள்” என்றார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் நாசர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆவடியில் உள்ள பருத்திப்பட்டு பசுமை பூங்காவை ஆய்வு செய்த அமைச்சர் சா.மு.நாசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்தினர் பல்வேறு கட்சிகளில் பல்வேறு பொறுப்புகளிலிருந்து வந்துள்ளனர். இதனால் குடும்ப அரசியல் குறித்துப் பேச அவருக்குத் தகுதி இல்லை. திமுகவினர் ஒரே கொள்கை உடையவர்கள். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே கட்சியில் பதவிக்கு வருவதில் எவ்வித தவறும் இல்லை. திமுகவின் சோதனைக் காலங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தி கட்சிக்காகச் சிறை சென்றவர் கனிமொழி. அப்படி கட்சிக்குக் கடுமையாக உழைத்த கனிமொழிக்குத்தான் துணைப் பொதுச் செயலாளர் பதவி கிடைத்திருக்கிறது. திமுகவில் உள்ள அனைவரும் ஒரே கொள்கைக்குச் சொந்தக்காரர்கள். அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் எவ்வித தவறும் இல்லை” எனத் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in