
அரசு மருத்துவமனையில் புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்க வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் லிஃப்டில் சிக்கிக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் புதிய திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகத் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மருத்துவமனைக்கு வந்திருந்தார். மூன்றாவது தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தரைத் தளத்திற்கு லிஃப்ட்டில் வந்து கொண்டிருந்தார். அவருடன் சில அதிகாரிகளும் லிஃப்ட்டில் பயணித்தனர். அப்போது லிஃப்ட் திடீரென பாதியிலேயே நின்றுவிட்டது.
இதனால் அங்கிருந்த அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர். உடனடியாக அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து லிஃப்டின் ஆபத்துக்கால கதவின் வழியாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் மீட்கப்பட்டனர். இதனால் ஸ்டான்லி மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.