
உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று சொல்பவர்களுக்காக தன்னை உதாரணம் காட்டி அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதற்காக நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
இன்றைய காலகட்டத்தில் எல்லா வயதினருக்கும், எல்லா தரப்பினருக்கும் அவசியமானது உடற்பயிற்சி. வெகுவாக மாறிய வாழ்க்கை முறைகளால் சிறு வயதிலேயே பல்வேறு நோய்களுக்கும் ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனை உணராது மக்கள் பலரும் உடற்பயிற்சியில் ஆர்வம் இல்லாமல் இருந்து வருகிறார்கள். அதற்கு நேரமில்லை என்று காரணமும் சொல்கிறார்கள்.
இந்த நிலையில் அவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் தன்னையே உதாரணமாக மாற்றிக் கொண்டிருக்கிறார் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், தற்போது மருத்துவத்துறை அமைச்சராக உள்ள மா.சுப்பிரமணியன். அவர் உடற்பயிற்சியில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டு வருகிறார். பல்வேறு மாரத்தான்களில் ஓடி பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.
தற்போது அமைச்சராக இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி செய்வதோடு இளைஞர்களிடம் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்து பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தஞ்சை மருத்துவமனை நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் வந்து 7.15 மணிக்கு திருச்சியில் இறங்கிய அமைச்சர், நிகழ்ச்சிக்கு இன்னும் இரண்டரை மணி நேரம் இருப்பதால் அதை வீணாக்கக்கூடாது என திருச்சி தஞ்சை பை பாஸ் சாலையில் 10 கி. மீ தூரம் ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், "காலை 10 மணிக்கு தஞ்சை மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் 7.15 மணிக்கு திருச்சியில் இறங்கி இரண்டரை மணி நேரம் வீணாகி விடக்கூடாது என்பதற்காக திருச்சி தஞ்சை பை பாஸ் சாலையில் ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டோம் . இப்பதிவு உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று சொல்பவர்களுக்காக" என பதிவிட்டுள்ளார். அமைச்சராக இருந்தாலும் தன்னுடைய நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்கி அதை மற்றவர்களுக்கும் அறிவுரையாக பகிர்ந்து கொள்ளும் அமைச்சர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.