முரசொலி அவதூறு வழக்கு; அமைச்சர் எல்.முருகனின் மனு தள்ளுபடி; உயர் நீதிமன்றம் உத்தரவு!

மத்திய அமைச்சர் எல்.முருகன்
மத்திய அமைச்சர் எல்.முருகன்

பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக முரசொலி அறக்கட்டளை தரப்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முரசொலி
முரசொலி

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என குற்றம்சாட்டி, தமிழ்நாடு பாஜக செயலாளர் சீனிவாசன் என்பவர் தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இது குறித்து, கடந்த 2019ல் வேலூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசியதாக, தமிழக பா.ஜ.வின் அப்போதைய தலைவர் எல்.முருகன் மீது முரசொலி அறக்கட்டளை தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இன்று அளித்த உத்தரவில் இணையமைச்சர் எல்.முருகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், மூன்று மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in