தனியார் மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பிய அமைச்சர் துரைமுருகன் இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் டிசம்பரில் உடல்நல பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினார். இதன் பின் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் காய்ச்சல் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், இன்று மீண்டும், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் துரைமுருகன் உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.