
தமிழ், திருக்குறள், இந்தி, சமஸ்கிருதம் போன்றவை குறித்து பேசுவது ஆளுநரின் வேலை அல்ல என்று காங்கிரஸ் கட்சியின் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அண்மைக்காலமாக தமிழ் மொழி குறித்தும், திருக்குறள், திராவிடம் ஆகியவை குறித்தும் பொது வெளியில் தமது கருத்துக்களை கூறி வருகிறார். அது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இ்தற்கு திருச்சி தொகுதி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், திருச்சி ஜங்ஷன் அருகில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை பார்வையிடுவதற்காக இன்று வந்திருந்தார். அவற்றை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுவதே ஆளுநரின் வேலையே தவிர, தமிழ், திருக்குறள், இந்தி, சமஸ்கிருதம் போன்றவை குறித்து பேசுவது அவர் வேலை அல்ல. அவருக்கென்று ஒரு எல்லை இருக்கிறது. அதற்குள்தான் அவர் செயல்பட வேண்டும்.
திமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுரை தான் வழங்கி உள்ளார். அதில் எந்த தவறும் இல்லை. ஒரு கட்சியின் தலைவர் அவர் கட்சியினரை கெஞ்சவும் செய்யலாம், கொஞ்சவும் செய்யலாம், மிஞ்சவும் செய்யலாம். தலைவருக்கு அனைத்து அதிகாரமும், உரிமையும் உள்ளது" என்றார்.