
திருப்பூர் அருகே காங்கேயத்தில் இன்று நடைபெறும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள 30 ஆயிரம் பேருக்கு மட்டன் சிக்கனுடன் பிரம்மாண்டமான அசைவ விருந்து தயாராகி உள்ளது.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள அகில இந்திய அளவிலும், தமிழ்நாட்டிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக முனைப்பு காட்டி வருகின்றன.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க மிக தீவிரமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அந்தக் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் ஒவ்வொரு பகுதியாக நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம், திருச்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திருப்பூரை அடுத்த காங்கேயம் அருகே உள்ள படியூரில் இன்று (செப். 24) நடைபெற்று வருகிறது.
ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 300 பேர் வீதம், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களிலுள்ள 50 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட சுமார் 15 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 30 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.
திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், எம்.பி இளங்கோ உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பயிற்சி அளிக்கின்றனர். இதைத் தொடர்ந்து, மாலை 4 மணி அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் மத்தியில் பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் நிர்வாகிகள், முகவர்கள் என அனைவருக்கும் கூட்டம் நடைபெறும் திடலிலேயே சைவம், அசைவம் என மதிய உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.
இதற்காக 24 அசைவ உணவு கூடங்களும், 12 சைவ உணவு கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் அமர்ந்து உண்ணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2,000 கிலோ மட்டனில் பிரியாணி, 3,000 கிலோ சிக்கனில் கிரேவி, தனியாக எலும்புக் குழம்புடன் உணவு தயாரிக்கப்பட்டுள்ளது.