
திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் தேர்வான உதயநிதி ஸ்டாலின், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ``இளைஞரணியை ஏறத்தாழ 40 ஆண்டுகள் வளர்த்தெடுத்து வலுப்படுத்திய கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்களிடம் திமுக இளைஞரணி செயலாளராக கழக பணியாற்ற மீண்டும் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதையொட்டி நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். திறன்மிகுந்த கழக இளைஞர்களை ஒருங்கிணைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
மேலும், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "திமுக இளைஞரணி செயலாளராக பணியாற்ற மீண்டும் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதையொட்டி, என்மீது எப்போதும் அன்பு பாராட்டி வழிநடத்தும் கழகப் பொதுச்செயலாளர் மாமாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்துபெற்றேன்" என்று கூறியுள்ளார்.