முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தியாகி இமானுவேல் சேகரனுக்கு முழு உருவ சிலை; மணி மண்டபம்; முதல்வர் அறிவிப்பு!

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரனாருக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபமும், முழு உருவ சிலையும் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தியாகி இமானுவேல் சேகரன்
தியாகி இமானுவேல் சேகரன்

இது குறித்து தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தியாகி இமானுவேல் சேகரனாருக்கு திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாண்டுக் கழகம், இமானுவேல் சேகரனாரின் மகள் சூரிய சுந்தரி பிரபா ராணி, பேரன் சக்கரவர்த்தி ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

தியாகி இமானுவேல் சேகரனார், 1924 அக்டோபர் 9 அன்று முதுகுளத்தூர் வட்டம் செல்லூர் கிராமத்தில் பிறந்தார். 1942ல் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு சிறை சென்றார். மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் போராடியவர்.

இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் உதயநிதி அஞ்சலி
இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் உதயநிதி அஞ்சலி

இந்நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், இமானுவேல் சேகரனாரின் சமூக பங்களிப்பை போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டினையொட்டி, அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in