மின் மீட்டர் கணக்கெடுப்பில் திமுக ஆட்சியில் நூதன முறைகேடு நடப்பதாகவும் இதனால் மக்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம்எல்ஏவுமான தளவாய் சுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தளவாய் சுந்தரம் கூறுகையில், “திமுக தேர்தல் அறிக்கையில் மாதம் தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என அறிவித்து இருந்தது. ஆனால் அதை சரியாக செய்யாமல் திமுக அரசு மக்களை வஞ்சிக்கிறது. இது ஒருபுறம் இருக்க இருமாதங்களுக்கு ஒருமுறை அதாவது 60 நாள்களுக்கு ஒருமுறை ரீடிங் எடுப்பதிலும் குழப்பங்கள் உள்ளது. 60 நாள்கள் கடந்து வந்து மின் கணக்கெடுப்பதால் ஏழை மக்களுக்கும் டேரிப் மாறிவிடுகிறது. இதனால் அவர்களின் மின்கட்டணம் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஏற்கெனவே ரீடிங் எடுத்ததில் இருந்து 20 நாள்களுக்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்னும் விதி உள்ளது. அப்படி இருக்க கட்டணம் அதிகமாக இருப்பதால் எளிய மக்களால் மின்கட்டணம் சரியான நேரத்தில் செலுத்த முடியாமலும் தவிக்கின்றனர். நுகர்வோருக்கு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வே இல்லாமல் உள்ளது. திமுக அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காணாவிட்டால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் ”என்றார்.