மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் குறித்த விவரங்களை எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்து தெரிந்துக் கொள்ளட்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை அடையார், கண்ணகி நகரில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அங்கன்வாடி கட்டிடம் அடிக்கல் நாட்டுதல் மற்றும் சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இதன் பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், " நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், ஆயுஸ் அமைச்சகம் மூலமாக தமிழக அரசுக்கு மறு விளக்கம் கேட்டு கடந்த 13-ம் தேதி கடிதம் வந்திருக்கிறது. இதுகுறித்து நேற்று விவாதிக்கப்பட்டது, விரைவில் சட்ட வல்லுநர்களின் பேசி அதற்கும் விளக்கம் அளிக்கப்படும், நீட் பொருத்தவரை இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது" என்றார்.
மக்களைத் தேடி மருத்துவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தவறான புள்ளி விவரத்தை கூறுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய புகார் குறித்த கேள்விக்கு, எடப்பாடி பழனிச்சாமி, எப்போது தூக்கத்தில் இருந்து விழித்தார் என்று தெரியவில்லை, காரணம் முதல் பயனாளிக்கு முதல்வர் வழங்கினார். சிட்லபாக்கத்தில் 50 லட்சமாவது பயனாளிக்கு வழங்கினார். நாமக்கலில் 75 லட்சமாவது பயனாளிக்கு வழங்கினார், திருச்சியில் 1 கோடியே 1வது பயனாளிக்கு வழங்கப்பட்டது. இப்படி எதிர்கட்சித் தலைவருக்கு பதிலளிக்கும் வகையில் அவர் வேண்டுமானால் டிஎம்எஸ் அலுவலகம் நேரில் வந்து விவரங்களை பெற்று பார்த்து கொள்ளட்டும்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.