பாஜகவில் பெண்கள் என்றால் ஒரு நீதி, ஆண்கள் என்றால் ஒரு நீதியா?: ஆபாச அர்ச்சனை ஆடியோ தொடர்பாக மநீம கண்டனம்

பொன்னுசாமி
பொன்னுசாமி

பாஜக பெண் நிர்வாகி தகாத வார்த்தைகளால் மிரட்டப்பட்ட விவகாரத்தை  தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்து விசாரணை நடத்தாதது ஏன் என மக்கள் நீதி மய்யம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அக்கட்சியின் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் சு.ஆ. பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உள்கட்சி விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு பேசிய தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம்  கட்சி விரோத செயல்பாடுகளுக்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

அதுவே சிறுபான்மையினர் அணி தலைவியான மருத்துவர் டெய்சி சரணை  தொலைபேசியில் அச்சிலேற்ற முடியாத, தகாத வார்த்தைகளால், தரம் தாழ்ந்து சகட்டுமேனிக்கு அர்ச்சனை செய்தோடு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய  பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில செயலாளர் சூர்யா சிவா மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  அவர் மீது கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும் (7நாட்கள்) வரை கட்சி நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்க தடை விதித்துள்ளது.  மேற்கண்ட  இந்த இரண்டு நிகழ்வுகளும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

ஏனெனில் உள்கட்சி விவகாரம் தொடர்பாக பேசியதற்காக ஒரு பெண் நிர்வாகியை கட்சியை விட்டு நீக்கிய மாநில தலைமை,  சக பெண் நிர்வாகியை தொலைபேசியில் தகாத வார்த்தைகளால் அர்ச்சித்து, சமூக விரோதிபோல கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய ஆண் நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்காமல் ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரில் வெறும் 7 நாட்களுக்கு மட்டும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதித்திருக்கிறது.

இது  பெண்கள் என்றால் ஒரு நீதியும், ஆண்கள் என்றால் ஒரு நீதியும் என்கிற அடிப்படையில் ஆணாதிக்க சிந்தனையோடு தமிழக பாஜக செயல்பட்டு வருவதையும், தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுவதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.  கட்சியில் உள்ள பெண் நிர்வாகிகளின்  பாதுகாப்பையே கட்சியின் தலைமையால் உறுதி செய்யமுடியாத போது தமிழக மக்களுக்கும் குறிப்பாக தமிழக பெண்களுக்கு பாஜக எந்த வகையில் பாதுகாப்பு அரணாக இருக்க முடியும்? 

மேலும் எது, எதற்கெல்லாமோ பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் செய்திகள் வெளியானவுடன் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் தேசிய மகளிர் ஆணையம், டெய்சி சரண்  தகாத வார்த்தைகளால் மிரட்டப்பட்ட விவகாரத்தில் இதுவரை தானாக முன்வந்து விசாரணை நடத்த முன்வராதது ஏன்?  ஒருவேளை மேலே ஆட்சி புரிபவர்களின் கடைக்கண் பார்வையும் அனுமதியும் கிடைத்தால்தான் மகளிர் ஆணையம் கூட செயல்படுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in